வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசில் ஒப்படைப்பு


வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசில் ஒப்படைப்பு
x

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்கப்பட்டு தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அது சோழர் காலத்தைச் (14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது) சேர்ந்த அனுமன் சிலை ஆகும். அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு உள்ளது. கடந்த 1961-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நிறுவனம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அது மீட்கப்பட்டு அங்கு கேன்பராவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 18-ந் தேதி வழக்கின் சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தகவல்களை மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story