துப்பாக்கி குண்டை விமான நிலையத்திற்கு கொண்டு சென்ற ஆசிரியருக்கு வினோத தண்டனை


துப்பாக்கி குண்டை விமான நிலையத்திற்கு கொண்டு சென்ற ஆசிரியருக்கு வினோத தண்டனை
x

விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டு கொண்டு சென்ற ஆசிரியருக்கு டெல்லி ஐகோர்ட்டு வினோத தண்டனை விதித்து உள்ளது.



புதுடெல்லி,



டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஆசிரியர் ஒருவர் தன்னுடன் துப்பாக்கி குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளார். இதனை கண்டறிந்த போலீசார் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், தன் மீது பதிவான எப்.ஐ.ஆரை நீக்க கோரி அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், உத்தரகாண்டின் சமோலி நகரில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது, 2008-09-ம் ஆண்டில் சாலையில் நடந்து சென்றபோது, கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்தேன். அதனை தொடர்ந்து, அந்த குண்டு என்னிடமே இருந்தது.

அதனை தவறுதலாக உள்நோக்கம் எதுவுமின்றி விமான நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டேன் என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் வழங்கியுள்ள தீர்ப்பில், ஆசிரியர் மீது பதிவான எப்.ஐ.ஆர். ரத்து செய்யப்படுகிறது. எனினும், சிறிய விவகாரத்திற்காக போலீசாரின் நேரம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

அதனால் ஆசிரியர் அதற்கு ஈடாக நிச்சயம், சமூக பணி ஒன்றையாற்ற வேண்டும். இதன்படி, ஒவ்வொரு பணி நாளின்போதும் கூடுதலாக ஆசிரியர் 2 மணிநேரம் வகுப்புகளை எடுக்க வேண்டும். படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு, அவர் பணி செய்யும் பள்ளி வளாகத்திலேயே இதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

இதனை உறுதி செய்யும்படி கல்வி இயக்குனரகத்திற்கும் உத்தரவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்காக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்யும்படி பள்ளி முதல்வரிடமும் கேட்டு கொள்ளப்படுகிறது என கோர்ட்டு உத்தரவு தெரிவிக்கின்றது.


Related Tags :
Next Story