ஜி-20 மாநாடு ஏற்படுத்திய தெருநாய்கள் பிரச்சினை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு


ஜி-20 மாநாடு ஏற்படுத்திய தெருநாய்கள் பிரச்சினை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Sep 2023 9:00 PM GMT (Updated: 11 Sep 2023 9:00 PM GMT)

நாய்களை பிடித்தபோது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அவை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளால் சில நன்மைகளும், சில பிரச்சினைகளும் ஏற்பட்டு உள்ளன. நன்மைகளை பொறுத்தவரை மாநாட்டையொட்டி செய்யப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகளால் வாகன ஓட்டம் குறைந்து டெல்லியில் காற்றின் தரம் நல்ல நிலைமைக்கு மேம்பட்டு இருக்கிறது. அதாவது நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 45-ல் இருந்தது. இது இந்த ஆண்டின் மிகக்குறைந்த அளவு ஆகும். டெல்லியில் மழை பெய்ததும் காற்றின் தரம் மேம்பட ஒரு காரணமாக இருந்தது. இதைப்போல டெல்லி மாநகரம் பல வகைகளில் அழகுபடுத்தப்பட்டதும் நல்ல விளைவாக உள்ளது.

இவை ஒருபுறம் இருக்க 3 நாட்கள் டெல்லி மாவட்டத்தில் வியாபாரம் தடை செய்யப்பட்டதும், தலைவர்கள் வருகையை முன்னிட்டு தொல்லை இல்லாமல் இருக்க தெருநாய்கள் பிடிபட்டதும் குறையாக கருதப்படுகிறது. குறிப்பாக தெருநாய்கள் பிரச்சினை, நாய் ஆர்வலர்களால் பெரிதுபடுத்தப்பட்டு வருகிறது.

நாய்களை பிடித்தபோது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அவை துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பிடிபட்ட நாய்களை, அவை பிடிபட்ட இடத்திலேயே விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கடந்த 4, 5 நாட்களாக தெரு நாய்கள் இல்லாதது என்னவோ மாதிரி இருப்பதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். பிடிபட்ட இடத்தில் நாய்களை விடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.


Next Story