ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை


ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)

ஆல்தூர் அருகே வனப்பகுதியில் உள்ள மரத்தில் ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிக்கமகளூரு:

ஆல்தூர் அருகே வனப்பகுதியில் உள்ள மரத்தில் ஒரே துப்பட்டாவில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

காதல் ஜோடி தற்கொலை

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்டது குள்ளன்பேட்டை அருகே உள்ள சக்திஹள்ளி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த வனப்பகுதிக்கு ஒரு காதல் ஜோடி வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென ஒரே துப்பட்டாவில், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி ஆல்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றினர்.

தனியார் நிறுவனத்தில்...

பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது ஆல்தூர் அருகே உள்ள தேவரகெரே காபி தோட்ட பகுதியை சேர்ந்த தர்ஷன்(வயது 21), ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஆனபாலு கிராமத்தைச் சேர்ந்த பூர்விகா(19) என்பதும், இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதில் தர்ஷன் காபித்தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், பூர்விகா தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மீன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

ஆனால் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி?, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சினை? என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story