சபரிமலையில் பயன்படுத்தப்படாத 6.65 லட்சம் அரவணை டின்களை அழிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


சபரிமலையில் பயன்படுத்தப்படாத 6.65 லட்சம் அரவணை டின்களை அழிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x

பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணையை அழிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

திருவனந்தபுரம்,

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அங்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவின்பேரில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமப்ர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் அரவணை ஏலக்காய் தரமற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால் ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பூச்சிமருந்து கலந்ததாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனையில் அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரவணை தயாரிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் அதனை பயன்படுத்தாவிட்டால் அது உண்ண முடியாததாகிவிடும்.

இந்த நிலையில் பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்தி அழிக்க கேரள அரசுக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டில் தேவசம்போர்டு அனுமதி கோரியது. இந்த மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணையை அழிக்க அனுமதி அளித்தது.




Next Story