தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதல் மந்திரி அறிவிப்பு!


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதல் மந்திரி அறிவிப்பு!
x

மத்திய பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

போபால்,

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ''டீசர்'' சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன.

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு தடை செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். எனினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரள ஸ்டோரி படம் காட்டுகிறது என்றும், இந்த படத்தை தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது என்றும் கூறினார்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "தி கேரளா ஸ்டோரி என்பது பயங்கரவாதத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்திய திரைப்படம். மத்தியப் பிரதேசத்தில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story