குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது தாக்குதல் - மே.வங்காளத்தில் பரபரப்பு


குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது தாக்குதல் -  மே.வங்காளத்தில் பரபரப்பு
x

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மனபெந்திர ஜனா என்ற நபரை கைது செய்ய இன்று காலை புபிதானிநகர் பகுதிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனர்.

அப்போது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் என்.ஐ.ஏ. அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி உடைந்தது. இந்த தாக்குதலில் என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலையடுத்து அங்கு போலீசார் விரைந்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story