தெலுங்கானா சட்டசபை தேர்தல்; மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்: எம்.எல்.சி. கவிதா பேட்டி


தெலுங்கானா சட்டசபை தேர்தல்; மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்:  எம்.எல்.சி. கவிதா பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2023 2:17 AM GMT (Updated: 30 Nov 2023 5:12 AM GMT)

இன்று விடுமுறை தினம் அல்ல. வாக்கு பதிவில் கலந்து கொண்டு ஜனநாயகம் வலுப்பெற செய்வதற்கான நாள் என்று அவர் கூறினார்.

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

பி.ஆா்.எஸ். கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. கவிதா ஐதராபாத் நகரில் வாக்களிப்பதற்காக புறப்பட்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆண்கள், பெண்கள் என இளம் தலைமுறையினர் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்.

இன்று விடுமுறை தினம் அல்ல. வாக்கு பதிவில் கலந்து கொண்டு ஜனநாயகம் வலுப்பெற செய்வதற்கான நாள். 2018-ம் ஆண்டு மக்கள் எப்படி பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ஆதரவளித்தனரோ, அதே நிலைமையே இந்த முறையும் காணப்படுகிறது. மக்கள் இந்த முறையும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி மீது பொதுமக்களின் அன்பு உள்ளது. மக்கள் காருக்கு (அக்கட்சி சின்னம்) வாக்களிக்க உள்ளனர். நாங்கள் வெற்றி பெற போகிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story