தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு


தினத்தந்தி 30 Nov 2023 1:30 AM GMT (Updated: 30 Nov 2023 12:50 PM GMT)

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

ஐதராபாத்,

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.

இதில், நக்சலைட்டுகள் பாதிப்பு காணப்படும் 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவர்களில் 221 பேர் பெண்கள். திருநங்கை ஒருவரும் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 35,655 வாக்கு மையங்களில், 3.17 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ந்தேதி நடைபெறுகிறது.

Live Updates

  • 30 Nov 2023 6:00 AM GMT


    ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பிரபல நடிகர் நாக சைதன்யா தனது வாக்கினை செலுத்தினார்.

  • 30 Nov 2023 5:00 AM GMT

     தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் இன்று காலை முதலே முக்கிய பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று இங்கு ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.


  • 30 Nov 2023 4:39 AM GMT

    மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். வாக்களிக்க வருகை தந்த ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக கேசிஆர் ஆட்சியின் கீழ் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால், தெலுங்கானாவின் எதிர்காலத்தை அவர்கள் முன்னெடுத்து செல்வார்கள் என்பதுதான். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொள்ளும். தெலுங்கானாவில் 3 -ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். பாரத் ஜோடோ யாத்திரைக்கு பிறகு தெலுங்கானாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாரதிய ராஷ்டிர சமிதி, பாஜக, ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க முயற்சிக்கின்றன” என்றார்.



  • 30 Nov 2023 3:52 AM GMT


    தெலுங்கானா மாநிலம் கமரெட்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 253-ல் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த 30 நிமிடங்களாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 30 Nov 2023 3:27 AM GMT

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

    தெலுங்கானாவில் உள்ள சகோதர சகோதரிகள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வயதினர் தங்கள் வாக்கினை தவறாது செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக்கூறினார்.


Next Story