'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் 'கவுண்ட்டவுன்' தொடங்கியது.!


சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் கவுண்ட்டவுன் தொடங்கியது.!
x
தினத்தந்தி 13 July 2023 7:44 AM GMT (Updated: 13 July 2023 8:04 AM GMT)

'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர 'கவுண்ட்டவுன்' தொடங்கியுள்ளது.

சென்னை,

'சந்திரயான்-3' விண்கலம்

'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

கவுண்ட்டவுன் தொடங்கியது

பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. விண்கலத்தை ஏந்திச்செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட உள்ளது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story