பல ஆயிரம் கோடி ரூபாய் நில முறைகேட்டிற்கு அரசே உதவி; குமாரசாமி பேட்டி


பல ஆயிரம் கோடி ரூபாய் நில முறைகேட்டிற்கு அரசே உதவி; குமாரசாமி பேட்டி
x

கர்நாடகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நில முறைகேட்டிற்கு அரசே உதவி செய்யும் விஷயத்தை சட்டசபையில் ஆவணங்களுடன் அம்பலப்படுத்துவேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அம்பலப்படுத்த முடிவு

கர்நாடகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளதாக கூறினால் அதற்கு ஆவணங்களை தாருங்கள் என்று மந்திரிகள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை முறைகேடு செய்ய சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அரசே உதவி செய்கின்றன. அதற்கான ஆவணங்களை சட்டசபையில் வெளியிட்டு அம்பலப்படுத்த முடிவு செய்துள்ளேன். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த அரசின் ஊழல்கள் மக்களுக்கு தெரிய வேண்டும். இந்த விவகாரத்தை பா.ஜனதாவினர் ஜீரணித்து கொள்ளட்டும் பார்க்கலாம். நான் தேவையின்றி சபையின் நேரத்தை வீணடிக்க மாட்டேன். பெங்களூருவில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தவிர மாநிலத்தில் 22 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆவணங்களுடன் பேசுவோம்

இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்தும் சட்டசபையில் பேச உள்ளேன். ஆவணங்கள் இல்லாமல் ஊழல்கள் குறித்து பேசுவதால் சபையின் நேரம் தான் வீணாகும். நாங்கள் ஆவணங்களுடன் பேசுவோம். சமீப காலமாக நான் சட்டசபை கூட்டங்களில் தீவிரமாக கலந்து கொள்ளவில்லை.

கர்நாடகத்தில் ஊழல் எந்த அளவுக்கு தீவிரமாகியுள்ளது மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த ஊழல்கள் பிரதமர் மோடிக்கும் தெரிய வேண்டும். அதனால் நான் உரிய ஆவணங்களை வெளியிடுவேன். வருகிற சட்டசபை தேர்தல் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு மிக முக்கியமானது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story