நேஷனல் ஹெரால்டு விவகாரம்; போலீசார் மீது எச்சில் துப்பிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி


நேஷனல் ஹெரால்டு விவகாரம்; போலீசார் மீது எச்சில் துப்பிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி
x

ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மகளிர் அணி தலைவி போலீசார் மீது எச்சில் துப்பியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.



புதுடெல்லி,



நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன்பேரில், ராகுல் காந்தி கடந்த 13ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். 14 மற்றும் 15ந்தேதிகளிலும் அவரிடம் விசாரணை நடந்தது. 3 நாட்களிலும் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த‌து. ஆனால், தனது தாய் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்து கொள்வதற்கு ஏதுவதாக விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, நேற்று (திங்கள் கிழமை) விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தது. இதன்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி நேற்று மீண்டும் ஆஜரானார். இதனால், மொத்தம் 40 மணிநேரம் அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இதனை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் அவர் ஆஜரானார்.

காங்கிரசின் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி.யான ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என கூறி காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டு சென்றனர். வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சி மற்றும் மூவர்ண கொடிகளை பிடித்தபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் அவர்கள் சென்றனர்.

ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிரப்பு தெரிவித்து கடந்த வாரம் தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் போராட்டங்கள் நடந்தன.

இதில், தெலுங்கானாவில் நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய பெண் மந்திரியான ரேணுகா சவுத்ரி, தன்னை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, ஆண் காவலர் ஒருவரது சட்டை காலரை பிடித்து இழுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போலீசாருடன் சவுத்ரி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இதன்பின்னர் அவர் கூறும்போது, போலீசார் திடீரென தள்ளி விட்டனர். பின்னால் இருந்து நான் முன்னே தள்ளப்பட்டேன். இதனால், நான் கீழே விழுந்து இருக்க கூடும். அதனால், காவலரின் தோள்பட்டையை பிடிக்க நான் முயற்சி செய்தேன் என கூறினார். கீழே விழுந்து விட கூடாது என்பதற்காகவே காவலரின் காலரை பிடித்தேன் என அவர் கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின்போது மற்றொரு சர்ச்சையான சம்பவம் நடந்து உள்ளது. ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மகளிர் அணி தலைவி நெட்டா டி சோசாவும் கலந்து கொண்டார். போலீஸ் வேனில் இருந்த அவர் கீழே இறங்க முயன்றார். பின்னர், திடீரென வேனுக்கு வெளியே நின்றிருந்த போலீசார் மீது எச்சில் துப்பினார். இந்த வீடியோ வெளிவந்து மற்றொரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.






Next Story