எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு...!


எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு...!
x

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் இலச்சினை இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணி அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் நேற்று தொடங்கியது. இன்றும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) வெளியிடவும் விவாதிக்கப்பட்டது. இலச்சினையைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்றில் எந்த இலச்சினை அதிகாரபூர்வமானதாக இருக்கும் என்பது இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story