பாலியல் வழக்கில் கைது: மடாதிபதியின் போலீஸ் காவல் நாளையுடன் நிறைவு


பாலியல் வழக்கில் கைது: மடாதிபதியின் போலீஸ் காவல் நாளையுடன் நிறைவு
x

பாலியல் வழக்கில் கைதாகி உள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவின் போலீஸ் காவல் நாளை (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூரு:

மடத்தில் சோதனை

சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவரை பாலியல் வழக்கில் சித்ரதுர்கா புறநகர் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை 3 நாட்கள் போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரிக்க சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி மடாதிபதியை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடாதிபதியின் ரத்தம், தலைமுடி, சிறுநீரும் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இன்று மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை சித்ரதுர்கா மடத்திற்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர். மடாதிபதி பயன்படுத்திய அறை, கழிவறை, அலுவலகம், கூட்டம் நடைபெறும் இடத்தில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

கண்ணீர்விட்டு அழுதார்

இந்த சோதனையின் போது மடாதிபதியிடம் போலீசார் சில கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு மடாதிபதி பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவமூர்த்தி முருகா சரணருவை போலீசார் மடத்திற்கு அழைத்து வந்திருப்பது பற்றி அறிந்ததும் 15-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் முருக மடத்திற்கு சென்று சிவமூர்த்தி முருகா சரணருவை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது சிவமூர்த்தி முருகா சரணரு கண்ணீர்விட்டு அழுததாக கூறப்படுகிறது.

மேலும் மடத்தில் உள்ள பூஜை அறைக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்ததாகவும், மடத்தின் ஊழியர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மடத்திற்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் மடத்தை சுற்றியுள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜாமீன் கிடைக்குமா?

மடத்தில் சோதனை முடிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மடாதிபதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்தும் மடாதிபதியிடம் விசாரணை அதிகாரி அனில், போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போதும் அவர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மடாதிபதியின் 3 நாட்கள் போலீஸ் காவல் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது.

அவரை நாளை காலை 11 மணிக்கு சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மடாதிபதியை மீண்டும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்பார்கள் என்றும் தகவல்கள் சொல்கிறது. அதே நேரம் மடாதிபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் நாளை நடக்க உள்ளது. மடாதிபதியின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு மடாதிபதி நியமனம்

சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதியாக இருந்த சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் சித்ரதுர்கா முருக மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக ஹெப்பாலா மகாந்தா ருத்ரேஸ்வரா சாமி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று முதல் மடத்தில் பூஜைகள் செய்ய உள்ளார். சித்ரதுர்கா முருக மடம் சார்பில் மாதந்தோறும் 5-ந் தேதி 10 ஜோடிகளுக்கு கூட்டு திருமணம் நடத்தப்படும். இன்று (திங்கட்கிழமை) மடம் சார்பில் நடத்தப்படும் திருமணத்தை பொறுப்பு மடாதிபதி முன்நின்று நடத்தி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவுரவ தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா மல்லாடிஹள்ளி கிராமத்தில் அனாதை ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் கவுரவ தலைவராக முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு இருந்தார். தற்போது பாலியல் வழக்கில் அவர் கைதாகி உள்ளதால், கவுரவ தலைவர் பதவியில் இருந்து சிவமூர்த்தி முருகா சரணருவை, ஆசிரம நிர்வாகம் நீக்கி உள்ளது.


Next Story