இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் பதிவான கற்பழிப்பு வழக்கை சமாதான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் பதிவான கற்பழிப்பு வழக்கை சமாதான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

பெங்களூருவில் பெண் கொடுத்த புகாரின் பேரில் பதிவான வழக்கை சமாதான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

உறவினர் மீது கற்பழிப்பு வழக்கு

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 34 வயது பெண் வசிக்கிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் அந்த பெண் ஒரு புகார் அளித்தார். அதில், தனது உறவினரான சதீஸ் தன்னை கற்பழித்து விட்டதாகவும், அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியதாகவும் கூறி இருந்தார்.

அதன்பேரில், பேடரஹள்ளி போலீசார், சதீஸ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்திருந்தனர். மற்ற 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கர்நாடக ஐகோா்ட்டில் சதீஸ் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் தன் மீது பதிவான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

வழக்கை ரத்து செய்து உத்தரவு

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரச்சன்னா முன்னிலையில் நடைடெபற்று வந்தது. இந்த நிலையில், கற்பழிப்பு புகார் கொடுத்த பெண்ணும், சதீஸ், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் ஆஜரானார்கள்.

அப்போது இந்த வழக்கை சமாதான பேச்சு மூலமாக தீர்த்து கொள்ள விரும்புகிறோம் என்று 5 பேரும் நீதிபதியிடம் கூறினார்கள். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

கற்பழிப்பு உள்ளிட்ட எந்த வழக்கமாக இருந்தாலும் சமாதான பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரத்தில் புகார் அளித்த பெண்ணுக்கு திருமணமாகி கணவர் இருக்கிறார். புகார் கூறப்பட்டுள்ளவர்களும் உறவினர்களாக உள்ளனர். இருதரப்பினரும் சமாதான பேச்சுக்கு முன்வந்திருப்பதால், மனுதாரர் மீது பதிவான கற்பழிப்பு வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story