'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவில்லை.. மக்களிடம் வரவேற்பு இல்லை... - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்...!


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவில்லை.. மக்களிடம் வரவேற்பு இல்லை... - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்...!
x

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவில்லை என்றும் மக்களிடம் வரவேற்பு இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 3-ம் தேதி தள்ளுபடி செய்தது. அத்துடன் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, மனுதாரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர். இதனால், திட்டமிட்டபடி இந்தப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தி கேரளாஸ்டோரி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தனர். இதையடுத்து, "இந்தப் படத்தில் எந்த ஒரு மதத்துக்கு எதிரான கருத்தும் இல்லை. இதுபோல திரைப்பட தணிக்கை வாரியமும் இந்தப் படத்தை ஆய்வு செய்து திரையிட அனுமதி வழங்கி உள்ளது. எனவே இந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது" என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பத்திரிகையாளர் குர்பான் அலி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த திரைப்படத்திற்கு தடை இதிக்கவில்லை என்றும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு எதிராக போராடியவர்களின் மீது சென்னை மற்றும் கோவையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாது.

ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால், திரையரங்கு உரிமையாளர்களே 7ஆம் தேதி தொடங்கி திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால், அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.





Next Story