விஷ பாம்பு கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவி..! கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்


விஷ பாம்பு கடிக்க வைத்து கணவரை கொலை செய்த மனைவி..! கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்
x

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரை விஷ பாம்பு கடிக்க வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்தவர் பிரவீன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பிரவீன் என்பவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் மனைவி லலிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த மனைவி கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பிரவீன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சுரேஷ் என்பவரின் உதவியை நாடினார். கணவரை கொன்றால் பிளாட் எழுதிக் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு சுரேஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 10-ம் தேதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கணவர் மது போதையில் தூங்குவது குறித்து லலிதா சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுரேஷ் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் இயற்கை மரணமாக இருக்க வேண்டும் என்பதால் விஷப்பாம்பை கொண்டு பிரவீனை கடிக்க வைத்துள்ளனர். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கணவர் இறந்தார்.

இதனையடுத்து கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக லலிதா கூறி அனைவரையும் நம்ப வைத்தார். ஆனால், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பிரவீனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பிரவீன் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில் லலிதா, கணவரை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story