ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர்


ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக நாடகமாடிய வாலிபர்
x

கடனை அடைப்பதற்காக ரூ.5 லட்சம் கேட்டு மர்மநபர்கள் கடத்தியதாக பெற்றோரிடம் நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவாவில் நண்பர்களுடன் கும்மாளமிட்டது அம்பலமானது.

மங்களூரு;

கோவாவுக்கு சுற்றுலா

உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் வருண் நாயக்(வயது 25). இவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி வருண் நாயக், தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.கோவாவில் இருக்கும்போது வருண்நாயக், பெற்றோரை தனது நண்பர்களின் செல்போன் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது வருண் நாயக், பெற்றோரிடம் தன்னை மர்மநபர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே பணத்தை கொடுத்து என்னை காப்பாற்றும்படி கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடுப்பி டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

கடத்தல் நாடகம்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் வருண்நாயக் இருக்கும் இடத்தை அவரது செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். அதில் வருண் நாயக், கோவாவில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் உடுப்பி போலீசார், கோவாவிற்கு விரைந்து சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் வருண் நாயக் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு கடற்கரை அருகே உள்ள கேளிக்ைக விடுதியில் தனது நண்பர்களுடன் ஜாலியாக பேசி கும்மாளமிட்டது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், வருண் நாயக்கை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர், பெற்றோரிடம் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

கடனை அடைக்க...

அதாவது சூதாட்டத்திற்கு அடிமையான வருண் நாயக்கிற்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது. அதனை அடைப்பதற்கு ெபற்றோரிடம் இருந்து பணம் வாங்க கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து உடுப்பிக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை, போலீசார் உடுப்பி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடனை அடைப்பதற்கு பெற்றோரிடம் இருந்து பணம் வாங்க கடத்தல் நாடகமாடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story