'நடப்பாண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கும்' - இந்திய வானிலை ஆய்வு மையம்


நடப்பாண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
x

தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பாண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கும் என்றும், 'எல் நினோ' தாக்கம் கோடை காலம் முழுவதும் நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் வெப்பமயமாதல் நிகழ்வு 'எல் நினோ' என்று அழைக்கப்படுகிறது.

மேலும் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகத்தின் சில பகுதிகள், மராட்டிய மாநிலம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகும் என்றும், மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் பதிவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே சமயம் மார்ச் மாதத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்ப அலைகள் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எல் நினோ' தாக்கம் கோடைக்காலம் முழுவதும் தொடரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 'லா நினா' (பொதுவாக இந்தியாவில் நல்ல பருவமழையுடன் தொடர்புடையது) பருவமழை காலத்தின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story