'ராமர் கோவில் கட்ட தடை ஏற்படுத்தியவர்களை அயோத்திக்கு அழைக்கக் கூடாது' - பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன்


ராமர் கோவில் கட்ட தடை ஏற்படுத்தியவர்களை அயோத்திக்கு அழைக்கக் கூடாது - பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன்
x
தினத்தந்தி 10 Jan 2024 10:52 AM GMT (Updated: 10 Jan 2024 11:04 AM GMT)

500 ஆண்டுகால கனவு நனவாகப் போகிறது என பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விழாவில் கலந்து கொள்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராமர் கோவில் கட்ட தடைகளை ஏற்படுத்தியவர்களை அயோத்திக்கு அழைக்கக் கூடாது என பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளர். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கடவுள் ராமர் அனைவரது வீட்டிற்கும் வர இருக்கிறார். இன்று நாடு முழுவதும் ராமர் மற்றும் ராமர் கோவில் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. 500 ஆண்டுகால கனவு நனவாகப் போகிறது.

கோவில் கட்ட ஒவ்வொரு கட்டத்திலும் இடையூறுகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளை அயோத்திக்கு அழைக்கவே கூடாது. இதே எதிர்கட்சி தலைவர்கள்தான், 'ராமர் கோவிலை நாங்கள் கட்டுவோம், ஆனால் தேதியை வெளியிட மாட்டோம்' என்று கூறினார்கள்."

இவ்வாறு பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்தார்.


Next Story