3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேறிய பிறகு 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது - அமித்ஷா உறுதி


3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேறிய பிறகு 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது - அமித்ஷா உறுதி
x

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேறிய பிறகு எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று அமித்ஷா கூறினார்.

காந்திநகர்,

குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், முதல்-மந்திரிகள் பூபேந்திர படேல் (குஜராத்), ஏக்நாத் ஷிண்டே (மராட்டியம்), பிரமோத் சவந்த் (கோவா) மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகி பிரபுல் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள், தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

வழக்கு நீடிக்காது

இதில், மத்திய-மாநில அரசுகள் இடையிலான 17 பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவற்றில் 9 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நீதி மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு மசோதா, பாரதீய சாட்சியங்கள் மசோதா ஆகியவற்றை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தோம்.

அந்த மசோதாக்கள் நிறைவேறிய பிறகு, எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. அதன்மூலம் 70 சதவீத எதிர்மறை ஆற்றல் நீக்கப்படும்.

அந்த சட்டங்களை அமல்படுத்த தேவையான போதிய உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்.

விண்வெளி துறை இலக்கு

சமீபத்திய சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு பிறகு இஸ்ரோ அமைப்பை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டி வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளாக இந்திய விண்வெளி துறைக்கு புதிய திசையை காட்டியது மட்டுமின்றி 2030-ம் ஆண்டுக்குள் விண்வெளி துறையில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உயர்த்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என்று அவர் பேசினார்.


Next Story