திருப்பதி: வீதிஉலா வரும் மலையப்பசாமி மீது நாணயங்களை வீச வேண்டாம்- தேவஸ்தானம் தகவல்


திருப்பதி: வீதிஉலா வரும் மலையப்பசாமி மீது நாணயங்களை வீச வேண்டாம்- தேவஸ்தானம் தகவல்
x

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் போது வீதிஉலா வரும் மலையப்பசாமி மீது நாணயங்களை வீச வேண்டாமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி,

திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி திருமலையில் உள்ள கோகுலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவில் நான்கு மாட வீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது.

உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அப்போது மாடவீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீச வேண்டாம். சில்லறை நாணயங்களை வீசுவதால் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர்களுக்கும், வாகனத்தை சுமந்து செல்லும் ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படும்.

தங்க, வைர ஆபரணங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் உற்சவர் மீது நாணயங்கள் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story