திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் 25-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு


திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் 25-ந்தேதி ஆன்லைனில் வெளியீடு
x

இந்த டிக்கெட்டுகளை வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அக்டோபர் மாதத்திற்கான திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்களின் முன்பதிவு வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு உள்ளிட்டவை வரும் 24-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

அக்டோபர் மாதத்திற்க்கான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுவோர் உள்ளிட்டோரின் முன்பதிவு வரும் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக வரும் 25-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது. இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,721 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,078 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story