மேற்கு வங்காளம்: 42 தொகுதிகளிலும் போட்டி; வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளம்: 42 தொகுதிகளிலும் போட்டி; வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 10 March 2024 10:54 AM GMT (Updated: 11 March 2024 10:46 AM GMT)

பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதில், நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் யூசுப் பதானும் களமிறங்கி உள்ளார். 'இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார். காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டது. அதனை மம்தா தரவில்லை. பிரச்சினைக்கு பேசி சுமூக தீர்வு காணப்படும் என காங்கிரஸ் கூறியிருந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த பேரணியில் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் மம்தா பானர்ஜி. 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடையாது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார். சிட்டிங் எம்.பி.க்கள் 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 பெண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவுக்கு கிருஷ்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு நடந்த சந்தேஷ்காலி பகுதி அமைந்துள்ள பஷீர்ஹட் தொகுதி எம்.பி., நுஷ்ரத் ஜகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஹஜி நூருல் இஸ்லாம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி., ஆக உள்ளார். அவ மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்தமான்- துர்காபூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் களமிறக்கப்பட்டு உள்ளார்.

இந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன். நீதித்துறையை நான் மதிக்கிறேன். ஆனால், சில நீதிபதிகள் பா.ஜ.க.,வின் ஏஜன்ட்களாக பணியாற்றுகின்றனர். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். அசாம், மேகாலயாவிலும் களமிறங்குவோம். உ.பி.,யில் போட்டியிடுவது குறித்து அகிலேஷ் யாதவுடன் பேசி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story