மூடிகெரேயில் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கிராமமக்கள் கோரிக்கை


மூடிகெரேயில்  காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட  கிராமமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2023 6:45 PM GMT (Updated: 21 Sep 2023 6:46 PM GMT)

மூடிகெரே தாலுகாவில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கமகளூரு-

மூடிகெரே தாலுகாவில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதி

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சாரகோடு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இரைதேடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட்டமாக கிராமத்திற்குள் புகுந்த யானைகள் காபி செடி மற்றும் பாக்கு மரங்களை நாசப்படுத்திவிட்டு சென்றன. இதில் ஏராளமான விளை பயிர்கள் நாசமானது. இதனால் கிராமமக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

கிராமமக்கள் கோரிக்கை

இந்தநிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுயானைகளை பிடிக்ககோரி வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வெளியேறி சாரகோடு கிராமத்திற்குள் புகுந்தன.

பின்னர் அந்த காட்டு யானைகள் பரசுராம் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் புகுந்து காபி, மிளகு, பாக்குமரங்களை நாசப்படுத்தின.

அப்போது தோட்டத்திற்கு வந்த பரசுராம் காட்டு யானைகள் கூட்டம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டார். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரட்டி அடிப்பு

அதன்பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் அருகே உள்ள குந்தூர் கிராமத்தை நோக்கி சென்றது. இந்தநிலையில் வனத்துறையினரை சாரகோடு கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை காட்டுயானை தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் சாரகோடு கிராமத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் நாங்கள் வேலைக்கு செல்லமுடியவில்லை. மேலும் பீதியடைந்து உள்ளோம். எனவே காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடு்க்க வேண்டும்.

நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

மேலும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், என்றனர். காட்டுயானைகளை ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story