கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி


கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட்டு பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Feb 2024 10:12 AM GMT (Updated: 25 Feb 2024 11:02 AM GMT)

நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போர்பந்தர்,

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை ஓகா அருகே உள்ள பேட் துவாரகா தீவுக்கு சென்ற பிரதமர் மோடி கிருஷ்ணர் கோவில் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஓகா துறைமுகத்தையும் பேட் துவாரகையையும் இணைக்கக் கூடிய சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார். இதையடுத்து, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தி ற்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.

நீருக்கடியில், ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கிய துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரார்த்தனை செய்தார். இந்த நகரம் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது. பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, இது நீர்நிலைகள் வழியாகச் செல்லும் பயணம் மட்டுமல்ல, துவாரகா நகரத்தின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும், இந்து மதத்தின் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணருடனான அதன் தொடர்பையும் உணர்த்தும் ஒரு வழியாகும்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,

நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவம். ஆன்மீக மகிமை மற்றும் நித்திய பக்தி கொண்ட ஒரு பழங்கால சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

உலகெங்கிலும் பழமையான நகரங்கள் பல நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது. இதில் துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இந்த நகரம், இந்தியாவில் உள்ள ஏழு புனித யாத்திரை மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


Next Story