தமிழகத்தை சேர்ந்த தந்தை-மகன் பரிதாப சாவு


தமிழகத்தை சேர்ந்த தந்தை-மகன் பரிதாப சாவு
x

ஹாசன் மாவட்டத்தில், லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹாசன்:

சம்பவ இடத்தில் பலி

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்கு தினமும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே நேற்று அதிகாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஓசூரை சேர்ந்தவர்கள்

போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு ஓசூரை சேர்ந்த கார்த்தி (வயது 17), அஞ்சப்பா (40), புனித் (15), கார்த்திக் (19), ராமசந்திரா (40) உள்பட 10 பேர் 2 கார்களில் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோவிலுக்கு செல்வதற்காக வந்துள்ளனர். அப்போது ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் அந்த லாரி அவர்கள் சென்ற ஒரு கார் மீது மோதியது. அதில் காரில் பயணம் செய்த தந்தை, மகனான அஞ்சப்பா மற்றும் கார்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு காரில் வந்தனர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story