ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்? - பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்


ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்? - பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்
x

ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகா தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், "ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் அளிப்பது பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்" என்று அவர் கூறினார்.

தேர்தல் சின்னங்கள் (பதிவு மற்றும் ஒதுக்கீடு) உத்தரவு 1968-ன் படி, ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட அந்த கட்சி நான்கு மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த மாநிலத்தில் இரண்டு சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். அதேபோல, ஓர் அரசியல் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, அந்த மாநிலத்தில் 6 சதவீத வாக்குகளுடன், இரண்டு சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


Next Story