கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படைக்கு பறந்த உத்தரவு


கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படைக்கு பறந்த உத்தரவு
x
தினத்தந்தி 29 Oct 2023 8:30 AM GMT (Updated: 29 Oct 2023 9:08 AM GMT)

கேரள குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டார்.

புதுடெல்லி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் பங்கேற்று மத வழிபாடு செய்தனர். இந்நிலையில், மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.

கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் 3 முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், மதவழிபாட்டு கூட்டரங்கில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள குண்டு வெடிப்பு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசினார். அப்போது குண்டு வெடிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைதொடர்ந்து என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்ல அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். குண்டு வெடிப்பு குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ.க்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள போலீசார் உறுதி செய்துள்ளனர். 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாகவும் கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.


Next Story