பத்ம விருது பெற்றவர்களை நேரில் சந்தித்து இரவு விருந்தளித்து, உபசரித்த மத்திய மந்திரி அமித்ஷா


பத்ம விருது பெற்றவர்களை நேரில் சந்தித்து இரவு விருந்தளித்து, உபசரித்த மத்திய மந்திரி அமித்ஷா
x

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பத்ம விருது பெற்றவர்களை நேரில் சந்தித்து இரவு விருந்தளித்து உபசரித்து உள்ளார்.


புதுடெல்லி,


நாட்டில் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. இதன்படி, பத்ம விபூஷண் விருது 6 பேருக்கும், பத்ம பூஷண் விருது 9 பேருக்கும் மற்றும் பத்ம ஸ்ரீ விருது 91 பேருக்கும் என மொத்தம் 106 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

அவர்களில் தமிழகத்தின் பிரபல பாடகியான சமீபத்தில் மறைந்த வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

இதன்படி, முன்னாள் மத்திய மந்திரி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு (வயது 90), நாட்டின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

எஸ்.எம். கிருஷ்ணா கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியாகவும், 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை மராட்டியத்தின் கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், பின்பு பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதேபோன்று, ஆதித்ய பிர்லா குரூப்பின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாடகி சுமன் கல்யாண்பூருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 50 பேருக்கு பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

இதன்பின்பு, பத்ம விருது பெற்றவர்களை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து பேசி, அவர்களுக்கு இரவு விருந்தளித்து, உபசரித்து கவுரவப்படுத்தினார்.


Next Story