உ.பி.: சம்பளம் இன்றி, கொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள்; அதிரடியாக மீட்பு


உ.பி.:  சம்பளம் இன்றி, கொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள்; அதிரடியாக மீட்பு
x

உத்தர பிரதேசத்தில் சம்பளம் எதுவும் இன்றி, கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த குழந்தை தொழிலாளர்கள் 21 பேரை ரெயில்வே போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.



சந்தவுலி,


உத்தர பிரதேசத்தின் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் ரெயில் நிலையத்தில் 11 சிறுவர்கள் உள்பட 21 பேர் சுற்றி திரிந்து உள்ளனர். அவர்களை கவனித்த ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மீட்டு, விசாரித்து உள்ளனர்.

இதில், வாரணாசி மாவட்டத்தில் லோத்தா பகுதியில் ரெயில் தண்டவாளத்திற்கான ஸ்லீப்பர் கட்டை உற்பத்தி ஆலையில் அவர்கள் வேலை பார்த்தது தெரிய வந்தது. ஆனால், சம்பளம் எதுவும் அவர்களுக்கு தரப்படவில்லை.

இதுபற்றி மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில் சிலர் கூறும்போது, மாதம் ரூ.1,200 சம்பளம் என கூறி எங்களை சூப்பர்வைசர் அந்த ஆலைக்கு அழைத்து சென்றார்.

ஆனால், கூறியபடி நடந்து கொள்ளவில்லை. எங்களுக்கு சம்பளம் மறுக்கப்பட்டது. ஆலை உரிமையாளரும் எங்களை மிரட்ட தொடங்கினார். ஒடிசாவின் ராய்கார் மாவட்டத்தில் இருந்து நாங்கள் வந்துள்ளோம்.

வீட்டுக்கு திரும்பி செல்ல நாங்கள் விரும்புகிறோம். எங்களது நண்பர்கள் சிலர் இன்னும் அந்த ஆலையில் வேலை செய்து வருகின்றனர் என கூறியுள்ளனர். உறுதி கூறிய சம்பளம் தரவில்லை. அதனால், ஆலையில் இருந்து தப்பி விட்டோம் என அவர்கள் கூறியுள்ளர்.

ஆலையில் சிக்கிய மீதமுள்ள குழந்தை தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story