105 பழங்கால கலைப்பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு


105 பழங்கால கலைப்பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
x

இந்தியாவிடம் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா ஒப்படைத்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண் ஜித்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

105 இந்திய பழங்கால பொருட்கள்

அதன்படி அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய தூதர் தரண்ஜித்சிங் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய மக்களை பொறுத்தவரை பழங்கால பொருட்கள் வெறும் கலை பகுதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த மான்ஹாட்டன் மாவட்ட நிர்வாகம், சிலை தடுப்பு பிரிவு, உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பழங்கால பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும்.

கலாசார முக்கியத்துவம்

இதில் கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப்பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப்பொருட்கள், வட இந்தியாவில் இருந்து 6 பொருட்கள், மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப்பொருட்கள் அடங்கும் என்று அவர் கூறினார்.

மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி. 2 முதல் 3-ம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 18-19-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டங்களை சேர்ந்தவை ஆகும். டெரகோட்டா, கல், உலோகம், மரத்தால் செய்யப்பட்டவை. சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின், முஸ்லிம் மதத்துடன் தொடர்புடைவை என்றும், மீதம் உள்ளவை கலாசாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது எனவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story