ஜி20 மாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டார்...!


ஜி20 மாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டார்...!
x
தினத்தந்தி 10 Sep 2023 5:43 AM GMT (Updated: 10 Sep 2023 5:55 AM GMT)

ஜி20 மாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார்.

டெல்லி,

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இந்தியா தலைமையிலான இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், வங்காளதேசம் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்றைய முதல் நாள் உச்சிமாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மேலும், மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் - ரஷியா போர் குறித்தும் இடம்பெற்றிருந்தது. அதேவேளை, போர் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவுக்கு நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. ரஷியா - உக்ரைன் போர் குறித்து மிகவும் மென்மையான கருத்துக்களே இடம்பெற்றிருந்தன.

ஜி20 நாடுகளின் கூட்டுப்பிரகடனத்தில் உக்ரைன் போர் குறித்து இடம்பெற்ற கருத்துக்கள் பின்வருமாறு:-

உக்ரைன் போரை பொறுத்தவரை, இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடந்த விவாதத்தை நினைவுகூருகிறோம். அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட நமது தேசிய நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

அனைத்து நாடுகளும் ஐ.நா.வின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமித்தலை ஏற்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சகாப்தம் போருக்கானது அல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டுப்பிரகடனத்தில் ரஷியாவின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் உக்ரைன் போர் விவகாரத்தில் ஜி20 நாடுகள் ஒன்றாக கூட்டுப்பிரகனம் வெளியிட்டு, அதில் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவிக்காதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளை ஒரே கருத்தின் கீழ் கொண்டுவர இந்தியா எடுத்த முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜி20 உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார். உச்சிமாநாட்டின் 2ம் நாள் கூட்டத்தில் ஜோ பைடன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story