விநாயகர் சதுர்த்தி, மீலாது நபியையொட்டி சிவமொக்காவில் மத நல்லிணக்க அமைதி ஊர்வலம்


விநாயகர் சதுர்த்தி, மீலாது நபியையொட்டி சிவமொக்காவில் மத நல்லிணக்க அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

விநாயகர் சதுர்த்தி, மீலாது நபியையொட்டி சிவமொக்கா நகரில் கலெக்டர் செல்வமணி தலைமையில் மத நல்லிணக்க அமைதி ஊர்வலம் நடந்தது.

சிவமொக்கா-

விநாயகர் சதுர்த்தி, மீலாது நபியையொட்டி சிவமொக்கா நகரில் கலெக்டர் செல்வமணி தலைமையில் மத நல்லிணக்க அமைதி ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி, மீலாது நபி

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்து மக்கள் மற்றும் இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். விநாயகர் சிலையை நிறுவி 10 நாட்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். 10-வது நாளில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று, கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படும் 28-ந்தேதி முஸ்லிம்களின் பண்டிகையான மீலாது நபி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முஸ்லிம்களும் ஊர்வலமாக செல்வார்கள். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

அமைதி ஊர்வலம்

இந்த நிலையில், சிவமொக்காவில் விநாயகர் சதுர்த்தி, மீலாது நபியையொட்டி மோதல் ஏற்படாமல் இருக்க மாவட்ட கலெக்டர் செல்வமணி இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவமொக்கா நகரில் கலெக்டர் செல்வமணி தலைமையில் மத நல்லிணகத்தை வலியுறுத்தி அமைதி பேரணி நடந்தது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சிவமொக்கா பி.எச். சாலையில் இருந்து அமிர் அகமது சர்க்கிள், சிவப்பா நாயக்கா சர்க்கிள் வழியாக மீண்டும் பி.எச்.சாலையில் உள்ள மைதானத்துக்கு இந்த ஊர்வலம் வந்தது. இதில் 200 அடி நீள தேசிய கொடியை பிடித்தப்படி சென்றனர்.

உறுதிமொழி

இதையடுத்து பி.எச்.சாலையில் உள்ள மைதானத்தில் வைத்து அனைத்து மதத்தினரும் கலெக்டர் செல்வமணி முன்னிலையில், விநாயகர் சதுர்த்தி, மீலாது நபி பண்டிகையை அமைதியுடன் கொண்டாடுவோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Next Story