விராஜ்பேட்டையில் போதைப்பொருள் விற்ற 8 பேர் கைது


விராஜ்பேட்டையில்  போதைப்பொருள் விற்ற 8 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 26 July 2023 6:45 PM GMT)

விராஜ்பேட்டையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

குடகு-

விராஜ்பேட்டையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்து வந்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விராஜ்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று விராஜ்பேட்டையை அடுத்த நாபொக்லு பகுதியில் 8 பேர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களின் கையில் இருந்த பைகளை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விற்பனைக்காக அதை வைத்திருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை விராஜ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அரேகாடு பகுதியை சேர்ந்த ரஷித் (வயது 23), கே.சி.பி.காலனியை சேர்ந்த இம்ரான் கான் (35), முர்தாமுடியை சேர்ந்த பிரகாஷ் (24), சேரம்பாடியை சேர்ந்த சாந்தகுமார் (27), கடகதாலுவை சேர்ந்த சஜீர் (37), நியாஜ் (35), ஒன்டியாங்கடியை சேர்ந்த சுரேஷ் (23), மைசூரு சாந்திநகரை சேர்ந்த இம்ரான் (46) என்று தெரியவந்தது.

8 பேர் கைது

இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விராஜ்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் இருந்த 1 கிலோ 243 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story