விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. 3-வது நாளாக விசாரணை


விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. 3-வது நாளாக விசாரணை
x

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் வேதாந்தா குழுமத்தின் அங்கமான தல்வண்டி சபோ மின்நிறுவன கட்டுமானத்துக்காக சீனாவை சேர்ந்த 263 பேருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக விசா பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் உள்ளிட்டவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு சி.பி.ஐ. கடந்த 14-ந் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் மத்தியில் உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது (2011-ம் ஆண்டு) நடந்ததாக கூறப்படுகிற, இந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் 26-ந் தேதி 9 மணி நேரமும், நேற்று முன்தினம் (27-ந் தேதி) 8 மணி நேரமும் டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சி.பி.ஐ. தலைமையகத்துக்கு கார்த்தி சிதம்பரம் நேற்று வந்தார். அவரிடம் விசா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு, சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

தன் மீதான குற்றச்சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story