'சிம்லாவில் நடக்கும் 2-வது கூட்டத்தில் பா.ஜ.க.வை வீழ்த்துவது குறித்து விவாதிப்போம்' - மம்தா பானர்ஜி


சிம்லாவில் நடக்கும் 2-வது கூட்டத்தில் பா.ஜ.க.வை வீழ்த்துவது குறித்து விவாதிப்போம் - மம்தா பானர்ஜி
x

பீகாரில் ஏற்பட்ட குழப்பங்களே எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பிற்கு காரணம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பாட்னா,

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே என மொத்தம் 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, "அமலாக்கத்துறை, சி.பி.ஐ. முகமைகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது. பீகாரில் ஏற்பட்ட குழப்பங்களே எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பிற்கு காரணம். சிம்லாவில் நடக்கும் 2-வது கூட்டத்தில் பா.ஜ.க.வை வீழ்த்துவது குறித்து விவாதிப்போம்" என்று தெரிவித்தார்.


Next Story