தொகுதி பங்கீடு முடியும் வரை ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு


தொகுதி பங்கீடு முடியும் வரை ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
x

உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை.

லக்னோ,

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இணைந்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதி கேட்டுள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இந்த சூழலில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் கலந்துகொள்வதாக அகிலேஷ் யாதவ் முன்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், காங்கிரசுடன் தொகுதி பங்கீடு முடியும் வரை ராகுல் காந்தியின் யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 15 இடங்களுக்கு மேல் ஒன்று கூட அதிகமாக கொடுக்க முடியாது என்றும், இதை ஏற்றுக் கொண்டால்தான் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என்றும் அகிலேஷ் யாதவ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story