மேற்கு வங்காளம்; பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடக்கம்


மேற்கு வங்காளம்; பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடக்கம்
x

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஜூலை 8-ந்தேதி ஒரே கட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி கடந்த 15-ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 2-வது இடம் பிடித்தது. அதற்கு முந்தின முறை கிடைத்த இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பஞ்சாயத்து தேர்தல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், பல இடங்களில் அரசியல் கட்சிகளிடையே மோதல் போக்கு காணப்பட்டது. மூர்ஷிதாபாத் மாவட்டத்தின் கார்கிராம் நகரில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியது.

வெளிப்படையான மற்றும் சிறந்த முறையில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற ஏதுவாக, மத்திய படைகளை ஏற்பாடு செய்யும்படி மாநில கவர்னருக்கு, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதினார். இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினார்.

அரசியல் பரபரப்பான சூழலில், மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று, வாக்குகளை செலுத்த தயாராகி உள்ளனர்.


Next Story