அரசியலில் இருந்து விலக காரணம் என்ன..? - அம்பத்தி ராயுடு விளக்கம்


அரசியலில் இருந்து விலக காரணம் என்ன..? - அம்பத்தி ராயுடு விளக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2024 2:21 PM GMT (Updated: 7 Jan 2024 4:42 PM GMT)

கடந்த 28-ம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அமராவதி,

ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. இவர் இந்தியாவுக்காக 55 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 203 ஆட்டங்களில் ஆடியுள்ளார். இதையடுத்து நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 28-ம் தேதி அம்பத்தி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்பத்தி ராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் சேர்ந்த 10 நாளில் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்த பதிவில் 'ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சியில் சேர்ந்த 10 நாளில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலக காரணம் என்ன என்பது குறித்து அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

துபாயில் வரும் 20ம் தேதி தொடங்க உள்ள சர்வதேச லீக் டி20 (ஐ.எல்.டி20) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாட உள்ளேன். தொழில்முறை விளையாட்டை விளையாடும் போது அந்த வீரருக்கு எந்த வித அரசியல் கட்சி சார்பும் இருக்கக்கூடாது என்பது விதி. எனவே அரசியலில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story