பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்


பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:45 PM GMT)

பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மங்களூரு-

பெல்தங்கடி தாலுகாவில் காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காட்டுயானைகள்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் பணிக்கல்லு கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் சிறுத்தை, காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து இரைதேடி வெளியேறி பணிக்கல்லு கிராமத்திற்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கு உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து தென்னை மற்றும் பாக்கு மரங்களை நாசப்படுத்திவிட்டு சென்றன. இதில் ஏராளமான விளை பயிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள், கிராமமக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

கிராமமக்கள் கோரிக்கை

இந்தநிலையில், ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை தடுக்கக்கோரி வனத்துறையினரிடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கல்லு கிராமத்திற்குள் குட்டியுடன் நுழைந்த 3 காட்டுயானைகள் ராகவேந்திரா என்பவர் தோட்டத்திற்குள் புகுந்து பாக்கு மற்றும் தென்னை மரங்களை நாசப்படுத்திவிட்டு சென்றன.

மேலும், அந்த யானைகள் குட்டியுடன் அப்பகுதியில் சுற்றி வருகின்றன. இந்தநிலையில் முண்டாஜே, தும்பெட்டு காஜே பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் குட்டியுடன் நுழைந்தன.. பின்னர் அந்த யானைகள் சுதாகர் மற்றும் சுந்தர கவுடா ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்களில் புகுந்து பாக்கு மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தின.

பட்டாசுகள் வெடித்து

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ஆனால் காட்டுயாைனகள் தோட்டத்திற்குள்ளேயே நின்றன. இதையடுத்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதையடுத்து கிராமமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சில நாட்களாக பெல்தங்கடி தாலுகாவில் உள்ள பணிக்கல்லு, முண்டாஜே, தும்பெட்டு காஜே கிராமங்களில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் பீதி

இதனால் நாங்கள் வேலைக்கு செல்லமுடியவில்லை. மேலும் பீதியடைந்து உள்ளோம். எனவே காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடு்க்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்.

காட்டுயானைகளை ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story