கேரளாவில் தம்பதிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பலை அடையாளம் காட்டிய பெண் படுகொலை - கணவர் தற்கொலை முயற்சி


கேரளாவில் தம்பதிகளை மாற்றி உல்லாசம் காணும் கும்பலை அடையாளம் காட்டிய பெண் படுகொலை - கணவர் தற்கொலை முயற்சி
x

கேரளாவில் தம்பதிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பலை அடையாளம் காட்டிய இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் கோட்டயம் போலீசில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், 'தன்னுடைய 33 வயது கணவர் சமூக வலைத்தளத்தில் உள்ள ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் உள்ளவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சந்திப்பார்கள். அப்போது குழுவில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் மனைவியை மாற்றி உறவு கொள்வார்கள். இந்த கும்பல் சந்தித்து கொள்ளும்போது என்னையும், கணவர் அழைத்து சென்றார்.

அப்போது அங்கிருந்தவர்களுடன் என்னையும் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். இது எனக்கு பிடிக்கவில்லை என கூறியபிறகும், கட்டாயப்படுத்துகிறார். இதனால் நான் சிலருடன் தகாத உறவில் ஈடுபடும் கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே எனக்கு தொல்லை தரும் இந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவில் சிலர் இதுபோன்ற குழுக்களை தொடங்கி செக்ஸ் உறவில் ரகசியமாக ஈடுபட்டுவரும் தகவல்கள் கிடைத்தன. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருப்பதும் தெரிய வந்தது. அந்த குழுக்கள் குறித்த விவரம் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்டறியப்பட்டது.

அந்த குழுவை சேர்ந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த குழு பற்றியும், இதில் இணைந்தவர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் கணவரை விட்டு பிரிந்து கோட்டயம் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு அந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண்ணின் உறவினர்களும் அங்கே வந்தனர். அவர்கள், தங்கள் பெண்ணை கொலை செய்தது அவரது கணவர் தான் என்றும், அவரை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து போலீசார், பெண்ணின் கணவரை தேடி அவர் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவர் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story