காங்கிரசில் இணைகிறார் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி


காங்கிரசில் இணைகிறார் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி
x
தினத்தந்தி 2 Jan 2024 12:09 PM GMT (Updated: 2 Jan 2024 12:54 PM GMT)

வரவிருக்கும் மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திற்குள் அவர் இணைய இருக்கிறார்.

வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புகிறது. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக ஒய்.எஸ். சர்மிளா நாளை டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், " ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைவதால் எங்கள் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் நலனுக்காக எங்கள் கட்சி அயராது உழைத்து வருகின்றது. எப்படியிருந்தாலும், ஆந்திராவில் காங்கிரஸை ஒரு முக்கிய கட்சியாக நாங்கள் பார்க்கவில்லை . கடந்த முறை 1.25% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர். ஷர்மிளாவை சேர்ப்பதன் மூலம், அவர்கள் இன்னும் சில சதவீத வாக்குகள் பெறுவார்கள் அவ்வளவுதான் " என்றனர்.


Next Story