இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற காதலன் தற்கொலை முயற்சி


இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற காதலன் தற்கொலை முயற்சி
x

வேறொருவருடன் திருமண பேச்சு நடந்ததால் இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாதகிரியில் நடந்துள்ளது.

யாதகிரி:

வேறொருவருடன் திருமண பேச்சு நடந்ததால் இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாதகிரியில் நடந்துள்ளது.

காதல்

யாதகிரி தாலுகா முத்கல் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவரது பெற்றோர் இறந்ததால், தனது மாற்றுத்திறனாளி சகோதரருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த சச்சின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அவர்களது உறவினர்கள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். மேலும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருமணம் நிச்சயம் குறித்து இளம்பெண்ணிடம் கேட்டு சச்சின் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் இளம்பெண்ணை அவர் அடித்து, உதைத்து தாக்கினார்.

கற்பழித்து கொலை

இந்த நிலையில் இளம்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்ற சச்சின், அங்கு வைத்து வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்ததாக தெரிகிறது. அதன்பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணின் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த இளம்பெண், உயிருக்கு போராடினார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, இளம்பெண்ணை கத்தியால் குத்திய சச்சின், அந்தப்பகுதியில் ஓடும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினர்.

காதலன் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் யாதகிரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற சச்சினை பிடித்து விசாரித்தனர். அப்போது தன்னை காதலித்துவிட்டு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலியை கற்பழித்து கொன்றுவிட்டு அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கைதான சச்சின், போலீஸ் தேர்வுக்கு தயாராகி வந்ததும், நேற்று முன்தினம் நடந்த போலீஸ் தேர்வை எழுத இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் யாதகிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story