சித்ரதுர்காவில் அரிவாளால் வெட்டி பெண் படுகொலை


சித்ரதுர்காவில் அரிவாளால் வெட்டி பெண் படுகொலை
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

சித்ரதுர்கா அருகே அரிவாளால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சித்ரதுர்கா-

சித்ரதுர்கா அருகே அரிவாளால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தோட்டத்தில் பெண் பிணம்

சித்ரதுர்கா மாவட்டம் மகாதேவரகட்டே கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம்மா (வயது46). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், பாக்கியம்மா அப்பகுதியில் உள்ள வீரபத்திரப்பா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பாக்கியம்மாவை தேடினர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில், வீரபத்திரப்பா தோட்டத்திற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது தோட்டத்தின் முட்புதரில் அவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இ்தனை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சித்ரதுர்கா புறநகர் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விசாரணை

அப்போது பாக்கியம்மா உடல் முழுவதும் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் பாக்கியம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக பெண்ணை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களையும் தேடி வருகிறார்கள்.


Next Story