மெட்ரோ ரெயில்களில் தினமும் 7 லட்சம் பேர் பயணம்


மெட்ரோ ரெயில்களில் தினமும் 7 லட்சம் பேர் பயணம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

ஒயிட்பீல்டு-சல்லகட்டா வழித்தடத்தில் சேவை தொடங்கிய நிலையில் பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் தினமும் 7 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒயிட்பீல்டு:

ஒயிட்பீல்டு-சல்லகட்டா வழித்தடத்தில் சேவை தொடங்கிய நிலையில் பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் தினமும் 7 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை

பெங்களூருவில் சாலை போக்குவரத்தை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை நகரின் மையப்பகுதியான சிட்டி ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்றது.

ஆனால் சிட்டி ரெயில் நிலையம் முதல் பையப்பனஹள்ளி வரையிலும், கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையேயும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சிட்டி ரெயில் நிலையம் வருபவர்கள் கே.ஆர்.புரம் வரை மெட்ரோ ரெயில்களில் வந்து பிறகு பி.எம்.டி.சி. பஸ்களை பிடித்து பையப்பனஹள்ளி வந்தனர்.

சோதனை ஓட்டம்

அதன் பிறகு மீண்டும் மெட்ரோ மூலம் சிட்டி ரெயில் நிலையம் வந்தனர். இந்த நிலையில் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடந்தது. மேலும் பாதுகாப்பு கமிஷனர், ஆய்வும் நடத்தினார். அனைத்து சோதனைகளிலும் தகுதி பெற்ற நிலையில் மெட்ரோ சேவை விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் பல வாரங்கள் ஆகியும் மெட்ரோ சேவை தொடங்கப்படவில்லை.

7 லட்சம் பேர் பயணம்

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காலை முதல் ஒயிட்பீல்டு முதல் பையப்பனஹள்ளி வழியாக சல்லகட்டா வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என திடீர் அறிவிப்பு வெளியானது. அதன்படி மேற்கண்ட நாளில் ரெயில் சேவை தொடங்கியது. இந்த புதிய சேவையால் ஐ.டி. ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், பெங்களூரு மெட்ரோ ரெயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை தினசரி அடிப்படையில் 7 லட்சத்தை எட்டி உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story