கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனம் விடுவிப்பு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனம் விடுவிப்பு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:45 PM GMT)

கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பு செய்ததால் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரு:

பெங்களூரு அல்சூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பிரகாஷ். இவர், இதற்கு முன்பு டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி இருந்தார். அப்போது கஞ்சா வழக்கில் ஒரு நபரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்து ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பறிமுதல் செய்திருந்த வாகனத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விடுவித்திருந்தார். அத்துடன் போதைப்பொருள் சிக்கிய சில பிரபலங்களிடம் இருந்து பிரகாஷ் பணம் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்பேரில், உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் வழங்கி இருந்தனர். அதில், விதிமுறைகளை மீறி பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவித்ததுடன், பண வசூலிலும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பிரகாசை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story