கூட்டத்துக்குள் புகுந்து திருடிய 3 பேர் கைது; 235 செல்போன்கள் மீட்பு


கூட்டத்துக்குள் புகுந்து திருடிய 3 பேர் கைது; 235 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 4 Oct 2023 8:00 PM GMT (Updated: 4 Oct 2023 8:00 PM GMT)

மும்பையில் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 235 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மும்பையில் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 235 திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

போலீசில் புகார்

மும்பை சிவ்ரி ரேத்தி பந்தர் பகுதியில் துறைமுக ஊழியர் ஒருவரின் செல்போன் காணாமல் போய் விட்டது. இது பற்றி அவர் சிவ்ரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் தாருகானா பகுதியை சேர்ந்த உஸ்மான் கான் (வயது27) என்பவரிடம் திருட்டு செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இதில் அவரது கூட்டாளிகளான பிரகாஷ் பார்மர் (40), தீபக் வகேலா (22) ஆகியோருடன் சேர்ந்து கூட்டம் மிகுதியான இடங்களில் இருந்து செல்போன்களை திருடி அதனை குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் 2 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 235 திருட்டு செல்போன்களை மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story