5 கிலோ தங்கம் கடத்தல்- இரண்டு பேர் கைது
வெளிநாட்டிலிருந்து 5 கிலோ தங்கம் கடத்தி வந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
மும்பை,
வெளிநாட்டில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேரை மும்பை விமான நிலையத்தில் விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து கைது செய்தனர்.
5 கிலோ தங்கம் பறிமுதல்
வெளிமாநிலத்தில் இருந்து மும்பைக்கு தங்கம் கடத்திவரவுள்ளதாக விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் மும்பை விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் கோழிக்கோடுவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் 2 பயணிகள் கொண்டு வந்த உடைமைகளில் பெல்ட்கள் மற்றும் பைப்புகள் இருந்ததை சந்தேகம் அடைந்து அதனை பிரித்து பார்த்தனர். அதில் 24 காரட் கொண்ட 5 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
இவர்கள் துபாயில் இருந்து வந்த நவ்நீத், மற்றும் அரியானாவை சேர்ந்த விஜேந்திரா ஆகியோர் எனவும், துபாயில் இருந்து கேரளா மாநிலம் சென்று அங்கிருந்து மும்பைக்கு உள்நாட்டு விமானம் மூலம் வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவர்கள் இதற்கு முன்பு 26 சம்பவங்களில் ரூ.9 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக தெரியவந்தது.
-----