அமராவதி மாவட்டத்தில் காலராவுக்கு 5 பேர் பலி


அமராவதி மாவட்டத்தில் காலராவுக்கு 5 பேர் பலி
x

அமராவதி மாவட்டத்தில் காலராவுக்கு 5 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

அசுத்தமான நீரின் மூலம் பரவக்கூடிய மிக மோசமான ஆட்கொல்லி நோய்களில் ஒன்று காலரா. வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரை பறிக்கும் இந்த நோய் மராட்டியத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள டோங்ரி, கொய்லாரி, கானா, நயா அகோலா ஆகிய இடங்களில் இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதுவரை இந்த தொற்று காரணமாக 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 3 ஆண்கள், 2 பெண்கள் அடங்குவர்.

இந்த நிலையில் தற்போது பருவமழை காரணமாக நோய்தொற்று வேகமாக பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். மேலும் தண்ணீர் தரம் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு, மேலாண்மை மற்றும் சிகிச்சை ஆகியவற்றுடன் சுகாதார விழிப்புணர்வு மூலமாகவும் நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.


Next Story